Published : 30 Mar 2024 01:50 PM
Last Updated : 30 Mar 2024 01:50 PM

கரூர் | வேட்பாளர் இல்லாமல் அதிமுக பிரச்சாரம்: ஆரத்திக்கு ரூ.50 கொடுத்ததால் பெண்கள் வாக்குவாதம்

கரூர்: கரூரில் அதிமுக வேட்பாளரை அழைத்து வராமல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். அவர் சென்ற சில நிமிடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக தாம்பூலத் தட்டுடன் காத்திருந்த பெண்களுக்கு 50 ரூபாய் மட்டும் வழங்கியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனால், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் அதிமுக சார்பில் வீரராக்கியம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், 9 மணி வரை வேட்பாளர் பிரச்சாரத்துக்கு வரவில்லை. 9 மணிக்கு மேல் அதிமுக வேட்பாளர் தங்கவேல் இல்லாமல், மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மட்டும் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், தாம்பூல தட்டுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பெண்களுக்கு, தலா 50 ரூபாயை அதிமுகவினர் வழங்கினர். நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் 50 ரூபாய் மட்டும் கொடுப்பதாக அதிமுகவினரிடம் பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x