Published : 29 Mar 2024 05:16 PM
Last Updated : 29 Mar 2024 05:16 PM

பிரதமர் ‘ரோடு ஷோ’வில் மாணவர்கள்: ஏப்.3 வரை கடும் நடவடிக்கையை தவிர்க்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

கோப்புப்படம்

சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஏப்ரல் 3-ம் தேதி வரை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கோவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டனர். இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளிக்கு எதிராக சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியை புகழ்வடிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தவறானது. குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி நிர்வாகத்தின் மீது காவல் துறையினர் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு கோவை சாய்பாபா காலனி போலீஸார் வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை தனியார் பள்ளி நிர்வாகத்துககு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x