

கோவை: கோவையில் கடந்த 18-ம் தேதி பாஜக சார்பில், மேட்டுப்பாளையம் சாலை சாயிபாபாகாலனி முதல் ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல்நிலையம் வரை ரோடு ஷோ எனப்படும் வாகனப் பேரணி நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இந்த பேரணியின் ஒரு இடத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாகமாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பவித்ரா தேவி, சாயிபாபாகாலனி போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதில்,‘ வடவள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள், தங்களது பள்ளியில் படிக்கும் 22 மாணவர்களை கட்சியின் தொப்பி, துண்டு ஆகியவற்றுடன்அனுப்பியுள்ளனர். மேலும், ஆதரவு கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக தொடர்புடைய பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.
அதன் பேரில், வடவள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்கு பதிந்து சாயிபாபாகாலனி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.