Published : 29 Mar 2024 05:41 AM
Last Updated : 29 Mar 2024 05:41 AM

கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கார்த்தி சிதம்பரத்துக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், தற்போதைய காங்கிரஸ் வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம் தனது பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் புதுப்பித்து தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, “கார்த்திசிதம்பரம் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க முடியாது. வேண்டுமென்றால் ஓராண்டுக்கு மட்டும் புதுப்பித்து கொடுக்கப்படும்” என்றார்.

கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “பாஸ்போர்ட் சட்ட விதிகளின்படி 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையிலான பாஸ்போர்ட்டை புதுப்பித்து பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது. அவ்வாறு புதுப்பித்து வழங்க மத்திய அரசு மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த்,“மனுதாரரான கார்த்தி சிதம்பரத்துக்கு 10 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட்டை புதுப்பித்துத்தர மறுப்பதற்கு மத்திய அரசு உரிய காரணங்களை தெரிவிக்கவில்லை. ஒவ்வொருமுறை வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை மனுதாரர் இதுவரை மீறவில்லை.

எனவே, கார்த்தி சிதம்பரத்துக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொடுக்க வேண்டும்” என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், “புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாட்டுக்கு செல்லும்போது வழக்கம்போல உரிய மனுவை தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம்” என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x