Published : 27 Mar 2024 01:15 AM
Last Updated : 27 Mar 2024 01:15 AM

வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதங்கள் அனுப்பி விழிப்புணர்வு @ தருமபுரி

தருமபுரி: கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி பகுதி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

2024 மக்களவை தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்கள் மத்தியில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று, வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த தேர்தல்களின் போது குறைந்த அளவு வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வாக்காளர்களின் முகவரிக்கு செல்லும் வகையில் தயார் செய்யப்பட்ட இந்த கடிதங்களை நேற்று (26-ம் தேதி) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, அஞ்சல் துறை பணியாளர்கள் மூலம் அனுப்பி வைத்தார்.

அப்போது, ஒவ்வொரு வாக்காளர் பெயரிலும் உள்ள கடிதத்தை உரியவர்களிடம் தவறாமல் சேர்ப்பித்து, கடிதம் வலியுறுத்தும் தகவலையும் உரியவர்களிடம் தெரிவிக்க வேண்டுமென அஞ்சல் துறை பணியாளர்களிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வலியுறுத்தினார்.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் கையெழுத்துடன் கூடிய அந்தக் கடிதங்களில், ‘அன்பார்ந்த வாக்காளரே...’ என்று தொடங்கி வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x