Published : 07 Feb 2018 09:04 AM
Last Updated : 07 Feb 2018 09:04 AM
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் நடந்த பண மோசடி புகாரை தொடர்ந்து, தொலைதூர கல்வி மைய முன்னாள் இயக்குநர் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தில் பயின்ற மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணங்களை, பல்கலைக்கழகத்தில் செலுத்தாமல் பெரும் மோசடி நடந்திருப்பதாக, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.
கொல்கத்தாவில் உள்ள தொலைதூர கல்வி மையத்தில் 538 மாணவர்கள் சேர்ந்து படித்துள்ளனர். இதில் 352 மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ரூ.28 லட்சம் கட்டணம் செலுத்தவில்லை. ஆனால், கட்டணம் செலுத்தாத மாணவர்கள், தொலைதூர கல்வி இயக்கம் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பண மோசடி நடந்தது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதேபோல, தொலைதூர கல்வி மையத்தில் பயின்ற மாணவர்களிடம் வசூலித்த பல கோடி ரூபாய் கட்டணம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்டமாக தொலைதூர கல்வி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் குணசேகரன், தமிழ்துறை தலைவர் டாக்டர் மாதையன், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிரின்ஸ் தன்ராஜ், கொல்கத்தாவில் இயங்கும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் முகர்ஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT