Published : 02 Feb 2018 06:52 PM
Last Updated : 02 Feb 2018 06:52 PM

ஜெயலலிதா நினைவிடம்: பொதுப்பணித்துறை டெண்டரை ரத்து செய்ய வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் கட்ட பொதுப்பணித்துறை சார்பில் விடப்பட்ட 43.63 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கும் முடிவை எதிர்த்து டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் வழக்கறிஞர் எஸ். துரைசாமி, தாம் தொடர்ந்துள்ள வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது கூடுதல் மனுவில் கூறியிருப்பதாவது:

“சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கும் நூறு கோடி ரூபாய் விதிக்கப்பட்டது. இதுவரை அந்த தொகை வசூலிக்கப்படாத நிலையில் அரசு செலவில் நினைவிடம் அமைப்பது சட்டப்படி குற்றம்.” என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவிடம் அமைத்தால் எதிர்கால சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடம் கட்டக் கூடாது என விதிகள் உள்ள நிலையிலும், நினைவிடம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 11-ம் தேதி வெளியிட்டு, அதில் பங்கேற்க கடைசி நாளாக பிப்ரவரி 7-ம் தேதியை அறிவித்துள்ள 43.63 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்ய வேண்டும், என துரைசாமி தனது கூடுதல் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x