Published : 22 Mar 2024 03:01 PM
Last Updated : 22 Mar 2024 03:01 PM

“அது பொய்ச் செய்தி” - கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் அவசர விளக்கம்

சென்னை: கடலூர் மக்களவைத் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுவார் என பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. ஆனால், ‘அவர் போட்டியிடவில்லை’ என பொய்யான தகவல்கள் பரவிய நிலையில், அதனை மறுத்து தங்கர் பச்சான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளபக்கத்தில், “கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச் செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார். அத்துடன், பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் இருக்கும் படத்தையும் அவர் வெளியிட்டு, தான் பாமக சார்பில் கடலூரில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.

தமிழில் வெளியான ‘அழகி’, ‘தென்றல்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான். அண்மையில் அவர் பாரதிராஜாவை வைத்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை இயக்கியிருந்தார். திரையுலகில் கவனம் செலுத்தி வந்த அவர் முதன்முறையாக தேர்தல் அரசியலில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x