Published : 21 Mar 2024 05:20 PM
Last Updated : 21 Mar 2024 05:20 PM

குட்கா வழக்கு | சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜர்!

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை சிபிஐ விசாரித்து வருகின்றது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்ய சிபிஐயிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணையை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி இருந்தார்.

அப்போது நீதிபதி, விசாரணையின் தற்போதைய நிலை என்ன? விசாரணைக்கு அனுமதி கிடைக்காத இருவருக்கு எதிராக ஒப்புதல் கிடைத்து விட்டதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு விசாரணை அதிகாரி, ஒப்புதல் கடிதம் சிபிஐயிடம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.

பரிசீலனை முடிந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். விரைவாக தாக்கல் செய்வதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x