Published : 20 Mar 2024 05:36 PM
Last Updated : 20 Mar 2024 05:36 PM

நிலம் வகை மாற்ற வழக்கில் ஆட்சியருக்கு பதிலாக மனு தாக்கல் செய்த தாசில்தாருக்கு ரூ.10,000 அபராதம் @ ஐகோர்ட்

சென்னை: நிலத்தை வகை மாற்றம் செய்து தரக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக பதில் மனு தாக்கல் செய்த தாசில்தாருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தை, அந்த நோக்கத்துக்காக பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டு மனைகளாக மாற்றும் வகையில் நிலத்தை வகைமாற்றம் செய்துதரக் கோரி மாவட்ட நகரமைப்பு திட்டத் துறை உதவி இயக்குனரிடம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சார்லஸ் ஜெயக்குமார் என்பவர் விண்ணப்பித்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வீட்டு மனையாக மாற்றி பட்டா வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட நகரமைப்பு திட்டத் துறை உதவி இயக்குனர் மற்றும் தாசில்தார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட நகரமைப்பு திட்டத் துறை உதவி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து எதிர் மனுதாரர்களுக்காக தாசில்தார் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இ.வி.சந்துரு, மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்யாமல் வட்டாட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவை நிராகரிக்க வேண்டும். ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேவையின்றி பதில் மனுத்தாக்கல் செய்ததாக கூறி தாசில்தாருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த தொகையை அவரது ஊதியத்தில் இருந்து பிடித்த செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x