Last Updated : 14 Mar, 2024 06:37 PM

 

Published : 14 Mar 2024 06:37 PM
Last Updated : 14 Mar 2024 06:37 PM

மருது சேனை அமைப்பு தலைவரைக் கொல்ல முயற்சி - மதுரையில் ஆதரவாளர்கள் சாலை மறியல்

மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை கொல்ல முயற்சி நடந்த சம்பவத்தைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மறியல்.

மதுரை: திருமங்கலம் அருகே வெடிகுண்டு வீசி மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை கொல்ல முயற்சி நடந்துள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மறியல் செய்ததால் பரபபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). இவர், மருது சேனை எனும் அமைப்பை தொடங்கி, அதன் நிறுவன தலைவராக செயல்படுகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிட்டவர். இவரது அமைப்பின் அலுவலகம் கள்ளிக்குடி - கல்லுப்பட்டி சாலையில் உள்ளது.

இந்நிலையில், இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் தனது அலுவலகத்தில் இருந்து கள்ளிக்குடி - விருதுநகர் நான்கு வழி சாலையிலுள்ள மையிட்டான்பட்டிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது மைட்டான்பட்டிக்குள் நுழையும் பகுதியில் இவரது கார் சென்ற போது, எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஒன்று ஆதிநாராயணன் கார் மீது மோதியுள்ளது.

தொடர்ந்து காரில் வந்த கும்பல், ஆதிநாராயணன் காரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசி உள்ளது. காரின் மீது வெடிகுண்டு விழவில்லை. ஆதிநாராயணன் காரை ஓட்டிய ஓட்டுநர் உடனடியாக சாலை ஓரம் பள்ளத்தில் காரைவிட்டு சாமர்த்தியமாக தப்பிக்க முயன்றார். ஆனாலும், அக்கும்பல் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயன்றது. ஆனாலும், காரின் முன் பகுதியில் குண்டு விழுந்து வெடித்தது. இருப்பினும், ஆதிநாராயணன் மற்றும் அவரது ஓட்டுநரும் சுதாரித்துக் கொண்டதால் அந்தக் கும்பல் அங்கிருந்து காரில் விருதுநகரை நோக்கி தப்பியது.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கள்ளிக்குடி காவல் ஆய்வாளர் லட்சுமி லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தினர். கள்ளிக்குடி போலீசில் ஆதிநாராயணன் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதனிடையே, இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மருது சேனை அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். பெட்ரோல் குண்டுவீச முயன்றவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கள்ளிக்குடி- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் குறுக்கே காரை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

ஆதிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த 2 நாளுக்கு முன்பு விருதுநகர், கள்ளிக்குடி பகுதியில் போலீசாரின் துணையோடு கஞ்சா புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும், இதில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே தனது அமைப்பின் பொருளாளரை கொலை செய்த ஞானசேகரின் ஆதரவாளர்கள் மூலம் தன்னை கொலை செய்யும் நோக்கில் தனது கார் மீது மோதி, பெட்ரோல் குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்ல முயற்சித்துள்ளனர். தனது கார் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினேன். காவல் துறை இச்சம்பவத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். சம்பந்தப்பட்டோரை விரைந்து கைது செய்யவிடின் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x