Last Updated : 14 Mar, 2024 05:06 PM

1  

Published : 14 Mar 2024 05:06 PM
Last Updated : 14 Mar 2024 05:06 PM

மத்திய அரசு திட்ட பயனாளிகளை நேரில் சந்தியுங்கள்: பாஜகவினருக்கு அண்ணாமலை உத்தரவு

அண்ணாமலை | கோப்புப் படம்.

மதுரை: மக்களவைத் தொகுதி வாரியாக மத்திய அரசு திட்டப் பயனாளிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுமாறு கட்சியினரை அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்தல், தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு என பரபரப்பாக இயங்கி வருகின்றன. பாஜக தலைமையிலான கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன் ஆகியோர் சேர்ந்துள்ள நிலையில் பாமகவை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழகத்தில் பாஜக கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இருந்தபோதிலும், மக்களவைத் தேர்தல் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் பாஜக தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், அணிப் பிரிவு மாநில நிர்வாகிகள் காணொலி வழியாக அடிக்கடி கூட்டங்கள் நடத்தி தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து பேச பாஜகவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு திட்டப் பயனாளிகளை நேரில் சந்தித்து பேசும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வீடு கட்டும் திட்டம், மருத்துவக் காப்பீடு, மக்கள் மருந்தகம், வங்கிக் கடன் திட்டம், குடிநீர் திட்டம், விவசாய நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் பயனடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் மக்களவைத் தொகுதி வாரியாக சேர்க்கப்பட்டு கட்சி நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியல் அடிப்படையில் பயனாளிகளை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்து மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் மத்திய அரசு திட்டத்துக்கான ஸ்டிக்கரை வழங்கவும் கட்சியினருக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாஜகவினர் கூறுகையில், ''மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் ஏராளமானோர்கள் உள்ளனர். இவர்களை நேரில் சந்தித்து மத்திய அரசால் பயனடைந்ததை தெரிவித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்ட பயனாளிகள் சந்திப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயனாளிகள் சந்திப்பு தொடர்பாக பாஜக நிர்வாகிகளுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பான விபரங்களை அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்து கட்சிக்கு அனுப்பவும் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பால் பயனாளிகளுடன் பாஜகவுக்கு நெருக்கம் ஏற்படுவதுடன், பிரதமரின் நலத்திட்டத்தை பயனாளிகளுக்கு மீண்டும் நினைவூட்டவும் முடியும். இப்பணியை விரைவில் முடித்து, அனைத்து பயனாளிகளையும் சந்தித்த முதல் மாநிலம் தமிழகம் என பெயர் எடுக்க வேண்டும் என அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x