Published : 14 Mar 2024 05:28 AM
Last Updated : 14 Mar 2024 05:28 AM

செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்க துறை விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: 26-வது முறையாக காவல் நீட்டிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு தொடக்க நிலையில் உள்ளதால், விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவரது நீதிமன்றக் காவல் 26-வது முறையாக மார்ச் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து, கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தது.

இந்நிலையில், எம்.பி. எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறையின் வழக்கை தள்ளிவைக்க கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்ததை மறுஆய்வு செய்ய கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணை நேற்று நடந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, எஸ்.பிரபாகரன் வாதிட்டதாவது:

மோசடி வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் முன்பு, அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தொடங்க முடியாது. ஒருவேளை மோசடி வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டால், அமலாக்கத் துறையின் விசாரணை கேள்விக்குறியாகிவிடும்.

மோசடி, சட்ட விரோத பண பரிமாற்றம் என 2 வழக்கையும் ஒரே நேரத்தில் விசாரித்து தீர்ப்பளித்தால், மனுதாரருக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் அமலாக்க துறை வழக்கு விசாரணையை குறைந்தபட்சம் ஓராண்டு தள்ளிவைக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அமலாக்கத் துறையின் வழக்கை விசாரிக்க ஆட்சேபம் இல்லை. எனவே, அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு வாதிட்டனர்.

அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், அமலாக்கத் துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.

இதையடுத்து நீதிபதிகள், “அமலாக்கத் துறையின் வழக்கு தொடக்க நிலையில் இருப்பதால் தற்போது எந்த நிவாரணமும் வழங்க முடியாது” என்று கூறி, அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தனர். இதுதொடர்பாக அமலாக்கத் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையே, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று நடந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரத்தின் கோரிக்கையை ஏற்று, வழக்கை நீதிபதி மார்ச் 18-க்கு தள்ளிவைத்தார். அதேபோல, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 26-வது முறையாக மார்ச் 18-க்கு நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x