Published : 12 Mar 2024 04:45 AM
Last Updated : 12 Mar 2024 04:45 AM

இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு: பழனிசாமி பதில் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கோப்புப்படம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து சூரியமூர்த்தி என்பவர் அளித்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகஉறுப்பினர் சூரியமூர்த்தி. இவர், கடந்த 2017-ல் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது, ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, பின்னர் பொதுச் செயலாளராக பழனிசாமிதேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவற்றை எதிர்த்து சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவை நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே, பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தில் சூரியமூர்த்தி மனு அளித்தார். அதற்கு ஆணையம் பதில் அளிக்காத நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று கடந்த பிப்.12-ல் மீண்டும் மனு அளித்தார்.

அதற்கும் பதில் வராததால், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இது மார்ச் 25-ல் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், சூரியமூர்த்தியின் மனு குறித்து பதில் அளிக்க பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x