Published : 11 Mar 2024 02:46 PM
Last Updated : 11 Mar 2024 02:46 PM

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காண கோரிய வழக்கு முடித்துவைப்பு

கோப்புப் படம்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் காரணமாக மாணவ - மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி, சென்னையைச் சேர்ந்த மாலினி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ‘முன்பு விடுமுறை நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள், தற்போது வேலை நாட்களில் போராடுவதால், ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ - மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டு இறுதி தேர்வு நெருங்கியுள்ள நிலையில், ஆசிரியர் போராட்டத்துக்கு தீர்வு காண அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ஆசிரியர்கள் போராட்டம் கடந்த 8-ம் தேதி வாபஸ் பெறப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x