Published : 08 Mar 2024 09:05 PM
Last Updated : 08 Mar 2024 09:05 PM

‘ஈஷா’ மகா சிவராத்திரி விழா தனித்துவமானது: குடியரசு துணைத் தலைவர் நேரில் பங்கேற்று புகழாரம்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார்.

கோவை: "உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில், ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது" என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.

கோவை ஈஷா யோக மையத்தில் 30-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியது: "சத்குரு முன்னிலையில் நடத்தப்படும் ஈஷா மகா சிவராத்திரி விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்கிறேன். நம் பாரத கலாச்சாரத்தில் மகா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் ஈஷாவில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழாவானது தனித்துவமானது; ஈடு இணையற்றது. உலகம் முழுவதும் உள்ள நவீன காலத்து இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

மதம், மொழி, இனம், தேசம், கலாச்சாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக இது திகழ்கிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது. அத்துடன், ஈஷாவில் கர்மா, பக்தி, ஞானம், க்ரியா என நான்கு மார்கங்களிலும் யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. சத்குரு யோகாவை உலகம் முழுவதும், பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்து வருகிறார். மனித குல நல்வாழ்வுக்காக அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

இவ்விழாவில் தொடக்க உரையாற்றிய சத்குரு , "இன்று நடைபெறும் மகா சிவராத்திரி விழா ஈஷாவில் நடத்தப்படும் 30-வது மகா சிவராத்திரி விழாவாகும். 1994-ம் ஆண்டு நடத்திய மகா சிவராத்திரி விழா, வெறும் 70 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டது. அப்போது 75 வயது பாட்டி ஒருவர் இரண்டே பாடலை இரவும் முழுவதும் பாடிக் கொண்டேயிருப்பார். இருப்பினும் அவருடைய பக்தி மெய் சிலிர்க்க வைக்கக்கூடியது.

கடந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவை மட்டும் உலகம் முழுவதுமிருந்து சுமார் 14 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நாள் வெறும் விழிப்புடன் மட்டுமே இருக்கும் நாளாக இல்லாமல், நம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை விழிப்படைய செய்யும் நாளாகவும் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்" என்று பேசினார்.

இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவரின் துணைவி சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய விழா நாளை காலை 6 மணி வரை நடைபெறும். இவ்விழாவில் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். விழா மேடையானது வாரணாசி கோவில் கோபுரங்களின் தோற்றத்துடன் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டிருந்து.

கலை நிகழ்ச்சிகளில், சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி, தமிழ் நாட்டுபுற பாடகர் மகாலிங்கம், மும்பை தாராவியை சேர்ந்த இளைஞர்களின் ராப் இசை நிகழ்ச்சி, லெபனீஸ் டிரம்ஸ் இசைக்குழுவினர், கர்நாடக இசை கலைஞர்கள் சந்தீப் நாரயணன், பிரதிவி கர்தவ் மற்றும் சூஃபி பாடகர்கள், குரு தாஸ் மன், ரதஜீத் பட்டாசர்ஜி உள்ளிட்ட உலகின் தலைச்சிறந்த கலைஞர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

மகா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வாக நள்ளிரவு மற்றும் பிரம்ம முகூர்த்த வேளையில் லட்சக்கணக்கான மக்கள் சத்குருவுடன் ஓம் நமச்சிவாய மந்திர உச்சாடனம் மற்றும் சக்தி வாய்ந்த தியான நிகழ்விலும் பங்கேற்கவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x