

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்பத்தூர் முன்னாள், இன்னாள் தாசில்தார்கள் 16 பேருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டர் என்பவரது நிலத்துக்குப் பட்டா வழங்கும்படி, அம்பத்தூர் வட்டாச்சியருக்கு கடந்த 2010-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நீதிமன்ற உத்தரவு அதிகாரிகளால் வேண்டுமென்ற அவமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தாசில்தார்கள் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.