Published : 07 Mar 2024 06:15 AM
Last Updated : 07 Mar 2024 06:15 AM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்பத்தூர் வட்டாட்சியர்கள் 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

சென்னை: அம்பத்தூரில் வட்டாட்சியர்களாக பணிபுரிந்த16 அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்துஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட வாரண்டை எதிர்த்து அரசு தரப்பில் உடனடியாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள தனதுசொத்துக்கு பட்டா கோரி மோலி அலெக்ஸாண்டர் என்பவர் வருவாய்த் துறை அதிகாரிகளிடம்மனு தாக்கல் செய்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வருவாய் கோட்டாட்சியர் மனுதாரருக்கு பட்டா வழங்க அம்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். ஆனால் வட்டாட்சியர் பட்டா வழங்க மறுத்ததால் மோலி அலெக்சாண்டர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டா வழங்க கடந்த 2010-ம்ஆண்டு அம்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால் அதன்பிறகும் பட்டா வழங்காததால் மோலி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011-ல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 12 ஆண்டாக நிலுவையில் இருந்துவந்த இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்தாண்டு அக்.6-ம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்திவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையேற்க மறுத்த நீதிபதி, கடந்த 12 ஆண்டுகளாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே உதாசீனப்படுத்தியுள்ளனர். எனவே கடந்த 2010 ஆகஸ்ட் முதல் அம்பத்தூரில் வட்டாட்சியர்களாக பணிபுரிந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த வழக்கு மீண்டும் நீதிபதிபி.வேல்முருகன் முன்பாக நேற்று முன்தினம்விசாரணைக்கு வந்தது. அப்போது அம்பத்தூரில் வட்டாட்சியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பல்வேறு இடங்களில் பணியாற்றிவரும் கே.மகாத்மா,ஆர்.பாண்டியன், என்.புஷ்பா தேவி, எம்.அசோகன், வி.கே.சீனிவாசன், எம்.குமார்,பி.செந்தில்வேல், டி.சந்திரசேகரன், கே.ஜெயராமன், ஆர்.சத்தியேந்திரராஜா, ஆர்.எஸ்.மோகன் குமார், டி.சந்திரசேகரன், நாகேஸ்வரராவ், சி்ன்ன கருப்பன், பார்வதி, லலிதாஆகிய 16 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அதன்பிறகு இந்த வழக்குநேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இவர்கள் யாரும் ஆஜராகவில்லை.

அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி பி.வேல்முருகன் மாலை 4 மணிக்கு அனைவரும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். அப்போதும் அவர்கள் ஆஜராகவில்லை. அதையடுத்து அரசு தரப்புக்கு கடும்கண்டனம் தெரிவித்த நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு உதவியாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அரசின் நலனைக் கருத்தில் கொள்வதாக தெரியவில்லை. உண்மை மறைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரிகள் அனைவரும் உயர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். ஆனால் நீதிமன்ற அறைக்குள்வராமல் வெளியே நின்று கொண்டு இருந்துள்ளனர். அரசு தரப்பு மற்றும் அதிகாரிகளின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. எனவே வட்டாட்சியர்களாக பணிபுரிந்த இந்த16 பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கிறேன்.

இவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்ற பதிவுத் துறை வாரண்ட் பிறப்பித்து அவர்களை சென்னை காவல்துறை ஆணையர் மூலமாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், அதுவரை காவல் துறை ஆணையர் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x