Published : 21 Feb 2018 04:50 PM
Last Updated : 21 Feb 2018 04:50 PM

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்

ராமேஸ்வரம்:

இலங்கை அரசின் சார்பாக புதிய தமிழ் தொலைக்காட்சி நிலையம் நல்லிணக்க தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முதலாக ஐ.டி.என் என்ற தனியார் தொலைக்காட்சி முதன்முதலாக ஒளிபரப்பினை துவங்கியது. 13. 04. 1979 அன்று தொடங்கப்பட்ட இதனை 05. 06.1979ல் இலங்கை அரசு கையகப்படுத்தியது. தொடர்ந்து 15.02.1982 அன்று துவங்கப்பட்ட இலங்கை தேசியத் தொலைக்காட்சியான ரூபவாஹினி தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் துல்லியமாகத் தெரிந்ததால், தமிழகத்திலும் ரூபவாஹினிக்கு கணிசமான பார்வையாளர்கள் இருந்தனர்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் 2000ஆம் ஆண்டில் இரண்டாவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பிரிவான ஐ தொலைக்காட்சி பெருமளவிலான நேரம் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டதால் இலங்கையில் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்காக தொலைக்காட்சியின் தேவை என்பதை உணர்ந்த அந்நாட்டு அரசு நல்லிணக்க தொலைக்காட்சி (Reconciliation Channel) என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி நிலையத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

செவ்வாய்கிழமை பிற்பகல் இலங்கை அரசின் சார்பாக கொழும்பில் ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைமையகத்தில் நல்லிணக்க தொலைக்காட்சியை அதிபர் மைத்திரிபால சிரிசேன துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன், பௌசி, யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக இந்தத் தொலைக்காட்சி உதவும் என்பதால் நல்லிணக்கத் தொலைக்காட்சி என்ற பெயரிலிலேயே புதிய தமிழ் தொலைக்காட்சி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய, சமய மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான முழு நேர ஒளிபரப்புகள் இந்த அலைவரிசையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐ.டி.என், ரூபவாஹினி, சேனல் ஐ, நேத்ரா, வசந்தம், என்.ரி.வி, உதயம், சேனல் ஒன் எம்.டிவி, சிரச, சக்தி, சுவர்ணவாஹினி, ஏ.ஆர்.டி, ரி.என்.எல், எண்டர்டென்ட் மெண்ட் டி.வி, டி.வி லங்கா, மேக்ஸ் , வெற்றி , சியத டி.வி, தி புத்திஸ்ட் டி.வி, ரெரன, சி.எஸ்.என், பிரைம் , சிசிடீவி செய்திகள், டான் தமிழ்ஒளி, டயலொக் தொலைக்காட்சி என 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் இலங்கயில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இவற்றில் தனியார்களால் பிரத்யேகமாக 24 மணி நேர தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் இயக்கப்பட்டாலும் கூட தமிழகத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்ப்பதற்கு இலங்கை தமிழர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x