

சென்னை: மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் கோயம்பேடு சந்தை முதல் எல்காட் பூங்கா வரை 22 உயர்மட்டமெட்ரோ ரயில் நிலையங்களில் மின் மற்றும்இயந்திர அமைப்பு பணிகளுக்கு ரூ.137.86 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63.246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது,மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் (26.1 கி.மீ.),மாதவரம் - சோழிங்கநல்லூர் (44.6 கி.மீ.) ஆகிய வழிதடங்களில் உயர்மட்டப் பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி உடபட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மாதவரம் - சோழிங்நல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் கோயம்பேடு சந்தை முதல் எல்காட் பூங்கா வரை 22 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.137.86 கோடி மதிப்பில் யுனிவெர்சல் மெப்புரோஜெக்ட்ஸ் இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, யுனிவர்சல் மெப் புரோஜெக்ட்ஸ் மற்றும் இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுத் தலைவர் ஜெயந்த் தேஷ் பாண்டே மற்றும் தென் மண்டலத் தலைவர் பிப்லாப் சட்டோபாத்யாய் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர்கள் எஸ்.ராமசுப்பு, எஸ்.கே.நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர