Published : 03 Mar 2024 12:01 PM
Last Updated : 03 Mar 2024 12:01 PM

ஐஸ்கிரீம் விலை ஏற்றம் ஏன்? - ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: இடுப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது இன்றியமையாதது என்றும் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்களை தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்களை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடை காலத்தில் கூடுதலாக விற்பனையை 20% அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த சிறிய விலையேற்றம் இன்றியமையாததாகும். எதிர்வரும் கோடையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் குழந்தைகளும் ஆவின் நிறுவனத்தின் சுவையான ஐஸ்கிரீமை வாங்கி மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை இன்று முதல் உயர்த்தப்படுகிறது. 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. 100 எம்.எல். எடை கொண்ட கிளாசிக் கோன் வெண்ணிலா ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும், 100 எம்.எல். எடைகொண்ட கிளாசிக் கோன் சாக்லேட் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x