Published : 03 Mar 2024 09:59 AM
Last Updated : 03 Mar 2024 09:59 AM

மீண்டும் நவாஸ் கனி; மீண்டும் ஏணி சின்னம் - காதர் மொகிதீன் அறிவிப்பு

திருச்சியில் நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்க ப்பட்டுள்ள நவாஸ் கனியை அறிமுகப்படுத்திய அக்கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன். படம்: ர.செல்வமுத்துகுமார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநிலப் பொருளாளர் ஷாஜகான், மாநில துணைத் தலைவரும், எம்.பியுமான கே.நவாஸ் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் காதர் மொகிதீன் கூறியதாவது: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று, மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள நவாஸ் கனி எம்.பி மீண்டும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவார். தேர்தல் பணியாற்றுவதற்காக நிதிக்குழு, பணிக்குழு, பிரச்சாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். இந்திய அளவில் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் இண்டியா கூட்டணி ஏற்படுத்தும்.

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கினால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x