Published : 02 Mar 2024 06:02 AM
Last Updated : 02 Mar 2024 06:02 AM

தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு பேரணி: அமைச்சர்கள் சாமிநாதன், சி.வி.கணேசன் பங்கேற்பு

சென்னை: வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி சென்னையில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழக தமிழ் வளர்ச்சி துறை மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு மயிலாப்பூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “தமிழ் மொழியை மேம்படுத்துவது மட்டுமின்றி காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். தாய் தமிழுக்காக போராடி சிறை சென்றவன் நான்.

அந்த அடிப்படையில் தமிழ் மொழியை மேம்படுத்தி அடுத்த சந்ததியினரும் அதை தொடர வேண்டும் என்ற முனைப்பில் இதுபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது, “தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பெயர் பலகைகள் எல்லாம் இந்தியில்தான் இருக்கும்.அங்கு ஆங்கிலம் கிடையாது.ஆனால், தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தருகின்றன. இந்த நிலை மாறவேண்டும். தமிழ் மொழிதான் நம் அடையாளம்” என்றார்.

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, “வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது தொடர்பாக மே 5-ம் தேதி நடைபெற உள்ள வணிகர் சங்க மாநாட்டில்10 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

தினமும் 60 தராசுகளுக்கு மட்டுமே அரசு முத்திரையிடப்பட்டு வந்தது. எங்கள் கோரிக்கையை ஏற்று, இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

தமிழில் பெயர் பலகை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்.தொடர்ந்து, ஒரு பல்பொருள் விற்பனை கடையில் தமிழில் பெயர் பலகை மாற்றம் செய்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x