Last Updated : 28 Feb, 2024 10:28 AM

1  

Published : 28 Feb 2024 10:28 AM
Last Updated : 28 Feb 2024 10:28 AM

நெல்லை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் விஜயதரணி

பாஜக பொதுக்கூட்ட மேடையில் விஜயதரணி

திருநெல்வேலி: நெல்லையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் புதிதாக அக்கட்சியில் இணைந்த விஜயதரணி பங்கேற்கிறார். அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமாவை ஏற்ற தமிழக அரசு விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியாக காலியாக இருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் விஜயதரணி இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜகவில் இணைந்த பின்னர் அவர் பங்கேற்கும் முதல் பிரம்மாண்ட கட்சி நிகழ்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு அவர் வருகை தந்தார். பிரதமருடன் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் அமர மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விஜயதரணிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று (பிப்.27) நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார், இண்டியா கூட்டணி கட்சிகள், நாட்டை கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

பின்னர் மதுரை சென்ற பிரதமர் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்” எனத் தமிழில் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து இன்று (பிப்.28), தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகைதந்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். குறிப்பாக, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி அரசு விழாவில்பங்கேற்ற பின்னர், பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமர் 11.15 மணிமுதல் 12.30 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் பகல் 12.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x