Last Updated : 26 Feb, 2024 12:46 PM

 

Published : 26 Feb 2024 12:46 PM
Last Updated : 26 Feb 2024 12:46 PM

சிவகங்கை மாவட்ட அதிமுகவில் வெடித்த கோஷ்டி பூசல்!

சிவகங்கை: மக்களவைத் தேர்தல் சமயத்தில் சிவகங்கை மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானவர் ஜி.பாஸ்கரன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என ஜி.பாஸ்கரன் எதிர்பார்த்த நிலையில், மாவட்டச் செயலாளர் செந்தில் நாதனுக்கு ஒதுக்கப்பட்டது. அத்தேர்தலில் செந்தில் நாதன் வெற்றி பெற்றார். அதன் பின்னர், ஜி.பாஸ்கரனை கட்சி நிகழ்ச்சிகளில் செந்தில்நாதன் தரப்பு புறக்கணித்து வந்தது.

இதனால் அதிருப்தியில் இருந்த ஜி.பாஸ்கரன், சிவகங்கை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி தர வேண்டுமென பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இதற்கு செந்தில் நாதன் தரப்பு முட்டுக்கட்டை போட்டது. சில மாதங்களுக்கு முன்பு, ஜி.பாஸ்கரனுக்கு மாநில அமைப் புச் செயலாளர் பதவி கிடைத்தது. அதன் பின்னர், அவருக்கு செந்தில் நாதன் தரப்பினர் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், மீண்டும் அவர்களுக்கு இடையே கோஷ்டி பூசல் தலை தூக்கத் தொடங்கி உள்ளது. பிப்.10-ம் தேதி சிவகங்கையில் நடந்த மாவட்ட ‘ஜெ’ பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் செந்தில்நாதன் ஆதர வாளர் வைத்திருந்த பேனரில் ஜி.பாஸ்கரனின் புகைப்படம் இடம் பெறவில்லை. மேலும் அவரை முறையாக அழைக்காததால் அவரும், அவரது மகனும், வடக்கு ஒன்றியச் செயலாளருமான கருணாகரனும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே, ஜி.பாஸ்கரனின் ஆதரவாளரும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாள ருமான பாலமுருகன், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வாழ்த்துத் தெரிவித்து சிவகங்கை நகரில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார். அதில் ஜி.பாஸ்கரன், கருணாகரன் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்ற நிலையில், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் புகைப்படம் இடம் பெறவில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், கோஷ்டிப் பூசல்வெடித்ததால் தொண்டர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில் ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பல அணிகளாகப் பிரிந்து விட்டன. மக்களவைத் தேர்தல் சமயத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இரு கோஷ்டிகளாகச் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா இருக்கும் வரை கோஷ்டிப் பூசலுக்கு இடமில்லாமல் இருந்தது. அதிமுக தலைமை உடனடியாகத் தலையிட்டு கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x