Published : 26 Feb 2024 12:31 PM
Last Updated : 26 Feb 2024 12:31 PM

“எங்களை வழிநடத்துபவராக ஜி.கே.வாசன் இருப்பார்” - அண்ணாமலை @ பாஜக கூட்டணி

சென்னை: "பாஜக கூட்டணிக்கு ஜி.கே.வாசன் முதல் அடியெடுத்து வைத்துள்ளார். அடுத்த 100 நாட்கள் எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜி.கே.வாசன் இருக்கப் போகிறார். " என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் தமாகா இணைந்ததை அடுத்து, அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. கூட்டணியில் இணைந்ததற்கு ஜி.கே.வாசனை சந்தித்து வாழ்த்திய பிறகு, அண்ணாமலை பேட்டி அளித்தார்.

அதில், "தமிழகத்தில் பாஜக கூட்டணியில் முதல் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது. பாஜக கூட்டணிக்கு ஜி.கே.வாசன் முதல் அடியெடுத்து வைத்துள்ளார். அடுத்த 100 நாட்கள் எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜி.கே.வாசன் இருக்கப் போகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பெருமை ஒன்று உள்ளது. பிரதமர் மோடியை விட்டு வாசன் எங்கேயும் சென்றதில்லை. தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இருந்து மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஜி.கே.வாசன். பெரிய மாற்றத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2026 தேர்தல்களில் இதன் தாக்கங்களை பார்க்கலாம்.

எங்கள் கூட்டணியை வலிமையான கூட்டணியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். பிற கூட்டணி கட்சிகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. மூன்றாவது முறையாக மோடி தலைமையான பாஜக ஆட்சி அமைய கூட்டணியை வலிமையாக மாற்ற வேண்டும். மோடி அரசின் சாதனைகளைச் சொல்லி தமிழ்நாட்டில் வாக்கு சேகரிப்போம். திமுகவால் அவர்கள் செய்த சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. அதனால் எங்களை விமர்சிக்கிறார்கள்.

2024 தேர்தலில் பாஜக மீது வைக்கப்படும் பிம்பங்கள் உடைக்கப்படும். கருத்தியல் அடிப்படையில் இங்கே இரண்டு கட்சிகளுக்கு தான் மோதல் உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x