Published : 07 Feb 2018 09:55 AM
Last Updated : 07 Feb 2018 09:55 AM

மாணவரை கத்தியால் குத்திய தனியார் பள்ளி ஆசிரியர்

கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் கத்தியால் குத்தியதில் மாணவர் காயமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் ரஹ்மான் (16). இவர் கரூர் மாவட்டம் மணவாடியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் விடுதி மாணவராகத் தங்கி பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றுபவர் கரூர் தாந்தோணிமலை அருகேயுள்ள வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (38).

ரஹ்மான், தனியார் கிரிக்கெட் சங்கங்கள் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்துள்ளார். இதுதொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் மற்றும் ரஹ்மான் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பள்ளியில் நேற்று பன்னீர்செல்வம், ரஹ்மான் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் சேவல் கட்டுக்குப் பயன்படுத்தும் சிறிய கத்தியால் ரஹ்மானின் உடலில் நான்கைந்து இடங்களில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ரஹ்மானை தாந்தோணிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து, வெள்ளியணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x