Published : 21 Feb 2024 05:20 AM
Last Updated : 21 Feb 2024 05:20 AM

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் விடுவிக்கக் கோரி அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு

செந்தில் பாலாஜி

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன்14-ம் தேதி அமலாக்கத் துறையினரால் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை கடந்த 16-ம்தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குற்றச்சாட்டுப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி விடுமுறையில் உள்ளதால், பொறுப்பு நீதிபதியான 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு அடிப்படை முகாந்திரமும் இல்லை என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

22-வது முறையாக காவல் நீட்டிப்பு: இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 22-வது முறையாக மார்ச் 4 வரை நீட்டித்து நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x