Published : 16 Feb 2024 04:02 PM
Last Updated : 16 Feb 2024 04:02 PM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் மற்றும் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசேகரன் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக 1996-ம் ஆண்டு அறநிலையத் துறையின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டேன். பின்னர் 2005-ல் துணை ஆணையராகவும், 2010-ல் இணை ஆணையராகவும், 2015-ல் கூடுதல் ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கூடுதல் பதவி உயர்வு பெற உரிய கல்வித் தகுதிகள் இருந்தும் 2016-ல் மீண்டும் இணை ஆணையராக பணியில் அமர்த்தப்பட்டேன். தன்னுடன் பணிபுரிந்த வாசுநாதன் மற்றும் திருமகள் ஆகியோரை கூடுதல் ஆணையர்களாக நியமிக்க கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூடுதல் ஆணையராக நியமிக்க உத்தரவிட்டும் எந்த நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், இணை ஆணையராகவே பணியில் இருந்து ஓய்வு பெற்றதால், கூடுதல் ஆணையராக பதவி உயர்வு அளித்து, அதற்கான பணபலன்களை அளிக்க உத்தரவிட்டிருந்தது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பட்டூ தேவானந்த் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஆகியோர் மார்ச் 15-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x