Published : 22 Jan 2014 09:20 AM
Last Updated : 22 Jan 2014 09:20 AM

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும் என்று மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு செவ்வாயன்று பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 21ந்தேதி ம.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. அது 23-ம் தேதி நடைபெறும். பா.ம.க. ஐ.ஜே.கே. கட்சிகளுடன் ஏற்கெனவே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது.தே.மு.தி.க. கொங்குநாடு மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக்கழகம் ஆகிய வற்றுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அரசியல் ஆதாயம்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்வதற்குப் பதில் போராட்டக் களத்தில் இறங்கி யுள்ளது.

எங்களை ஆட்சி செய்ய அனுமதிக்கவில்லை என்று சொல்லி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சியில் இருந்து விலகி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்.

பிரச்சினைக்கு ஒரே தீர்வு

இலங்கை - இந்தியாவின் தமிழக மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் இருக்கும்வரை தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பது சுவரில் முட்டுவதற்கு சமம். இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு பா.ஜ.க. ஆட்சிதான்.

கூட்டணி ஆட்சிதான்

தேர்தலில் 300 சீட்டு கள் பெற்று பா.ஜ.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றிபெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறும்.

மோடி தமிழகம் வருகை

நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டம் சென்னை வண்டலூர் அருகே வி.ஜி.பி. மைதானத்தில் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின்போது, தேசிய செயற்குழு உறுப்பினர் லலிதா குமாரமங்கலம், மாநிலச் செயலர் வானதி சீனிவாசன், இளைஞர் அணி மாநில பொதுச்செயலர் கமல்குமார் ஆகியோர் உடனி ருந்தனர்.

முன்னதாக, புதிய தமிழகம், கொங்குநாடு முன்னேற்றக்கழகம், அம்பேத்கர் புரட்சி புலிகள், அகில இந்திய மக்கள் சங்கம், அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மீனவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x