Published : 23 Feb 2018 07:24 AM
Last Updated : 23 Feb 2018 07:24 AM

இலங்கையில் தமிழ் மக்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்

இலங்கை அரசின் சார்பில் நல்லிணக்க தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தமிழ் தொலைக்காட்சி தொடங்கப் பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முதலாக ஐ.டி.என். என்ற தனியார் தொலைக்காட்சி 1979-ல் ஒளிபரப்பை தொடங்கியது. இதை அந்த ஆண்டிலேயே இலங்கை அரசு கையகப்படுத்தியது. தொடர்ந்து 1982-ல் தொடங்கப்பட்ட இலங்கை தேசியத் தொலைக்காட்சியான ரூபவாஹினி தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் துல்லியமாக தெரிந்ததால், தமிழகத்திலும் இதற்கு கணிசமான பார்வையாளர்கள் இருந்தனர்.

அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனத்தில் 2000-ம் ஆண்டில் 2-வது அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட்ட ‘ஐ’ தொலைக்காட்சியில் பெருமளவிலான நேரம் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதனால் இலங்கையில் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்காக தொலைக்காட்சியின் தேவையை அந்நாட்டு அரசு உணர்ந்தது. இதைத் தொடர்ந்து, நல்லிணக்க தொலைக்காட்சி (Reconciliation Channel) என்ற பெயரில் புதிய தொலைக்காட்சியை உருவாக்க அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 20-ம் தேதி இலங்கை அரசின் சார்பாக ரூபவாஹினி கூட்டு ஸ்தாபன தலைமையகத்தில் நல்லிணக்க தொலைக்காட்சியை அதிபர் சிரிசேன தொடங்கி வைத்தார்.

முழு நேர ஒளிபரப்புகள்

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய, சமய மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான முழுநேர ஒளிபரப்புகள் இந்த அலைவரிசையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 25-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் இலங்கையில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இவற்றில் பிரத்யேகமாக 24 மணி நேர தமிழ் தொலைக்காட்சிகள் இயக்கப்பட்டாலும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்ப்பதற்கு இலங்கை தமிழர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x