Published : 12 Feb 2024 01:13 PM
Last Updated : 12 Feb 2024 01:13 PM

“பல மாநிலங்கள் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை” - மரபு மீறல் புகார்களுக்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை: ஆளுநருடைய சொந்த கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை. ஆனால் இங்கே நாம் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “பிப்.13,14 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான விவாதங்கள் நடைபெறும். பிப்.15ஆம் தேதி விவாதத்துக்கான பதிலுரை வழங்கப்படும். பிப்.19ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், பிப்.20ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து 21,22ஆம் தேதிகளில் இரண்டு நிதிநிலை அறிக்கைகள் மீதான பொது விவாதம் நடைபெறும். 22ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும்.

ஆளுநருடைய சொந்த கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பேரவை விதி 176(1)ன் படி சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கும்போது, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். அடுத்து ஆளுநர் உரை, நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். ஆளுநரை அழைத்து சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. பல மாநிலங்களில் ஆளுநரை அழைப்பதே இல்லை. ஆனால் இங்கே நாம் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள். ஆனால் கொள்கை, சித்தாந்த ரீதியாக பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மரபை கடைபிடித்து வருகிறோம். ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான எந்த செய்தியும் இல்லை.

ஆனால் ஆளுநர் முதல் பத்தியையும், கடைசி பத்தியையும் மட்டும் வாசித்துவிட்டு நிறுத்திவிட்டார். நாம் தமிழ்நாடு முழுவதுமே முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுகிறோம். இந்தியாவிலேயே தமிழகத்தை விட தேசப் பற்றாளர்களோ, சுதந்திரத்துக்காக தியாகம் செய்தவர்களோ எங்கு இருக்கிறார்கள்? சிப்பாய் கழகம் வேலூரில் தான் நடந்தது.

ஆளுநர் உரையில் எந்தெந்த இடத்தில் குறைகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுவதற்கு பதில், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை என்றால் எப்படி? மிகப்பெரிய இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு உள்ள மாநிலம் தமிழ்நாடு. இங்கே ஒரு மரபு உள்ளது. அதை ஏன் மாற்ற வேண்டும்? என்று பேசினார்.

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவையில் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் ரவி அவையிலிருந்து வெளியேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x