Published : 09 Feb 2024 08:15 PM
Last Updated : 09 Feb 2024 08:15 PM

“பாஜகவுக்கு நெருக்கமான அன்புமணியே மருத்துவக் கல்லூரியை பெற்று தரட்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரூர்: “திமுக ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை எனக் கூறும் அன்புமணி, இப்போது பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கிறார். அவரும் கேட்டு பெற்று தந்தால் தாராளமாக வாங்கிக் கொள்வோம்” என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.77 கோடியில் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்வு இன்று (பிப்.9) நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு அதி நவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளும், மருத்துவ கட்டிடங்களை துரிதமாக கட்டி தரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2022-ம் ஆண்டு ஜன.12-ம் தேதி வரை 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

கல்லூரிகள் தொடங்கியதற்கு பிறகு அவற்றுக்கு நிதி ஆதாரங்கள் தந்து ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 500, 600, 700 படுக்கைகள் கட்டி தரப்பட்டன. கிருஷ்ணகிரி, அரியலூர், விருதுநகர், திருவள்ளூர், நாமக்கல் 8 மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.300, ரூ.400 கோடி வரை செலவிடப்பட் டுள்ளன. இன்னும் நாகப்பட்டினம், ஊட்டி உள்ளிட்ட 3 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டி உள்ளது. மருத்துவக் கல்லூரி திறப்பது மட்டுமே மருத்துவத்துறையின் வேலையல்ல.

தமிழகத்தில் உள்ள 74 மருத்துவக் கல்லூரிகளில் 37 அரசு கல்லூரிகளாகும். கடந்த 2011-ம் ஆண்டிலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழகத்தில் பெரம்பலூர், புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென முதல்வர் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 15 முறைக்கு அதிகமாக டெல்லி சென்று மத்திய மருத்துவத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியாவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை வைத்து வருகிறேன். திமுக ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை எனக்கூறும் அன்புமணி, இப்போது பாஜகவுக்கு நெருக்கமான கட்சியாக இருக்கிறார். அவரும் கேட்டு பெற்று தந்தால் தாராளமாக வாங்கிக் கொள்வோம். மருத்துவக் கல்லூரி தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்களை ஆதாரங்களுடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் (குளித்தலை), பி.ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந் தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x