Last Updated : 26 Aug, 2014 12:00 AM

 

Published : 26 Aug 2014 12:00 AM
Last Updated : 26 Aug 2014 12:00 AM

124 ஏரிகளின் நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல்: முறைகேடு நடந்ததாக கிராம மக்கள் புகார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 124 ஏரிகளின் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் முறைகேடு நடந்திருப்பதாக ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஏரிநீர்ப் பாசனப் பகுதிகளின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் பற்றிய, பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளின் திட்டங்கள் மற்றும் தகவல்களை ஊர்மக்களிடம் கொண்டு செல்வதற்காக, அப்பகுதிகளில் தேர்தல் மூலம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த தேர்தல், நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் என்றழைக்கப்படுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். வருவாய் கோட்டாட்சியர், தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் தாசில்தார் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் செயல்படுவர்.

ஒரு ஊரில் உள்ள ஏரியின்பரப்பளவைப் பொருத்து, ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் படுவார். இந்த தொகுதிகள் அனைத்துக்கும் சேர்த்து ஒருதலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதாவது தலைவருக்கு ஒன்று, தங்கள் தொகுதி உறுப்பினருக்கு ஒன்று என இரண்டு ஓட்டுக்களை வாக்காளர்கள் போடுவார்கள்.

இந்த தேர்தலில் அக்கிராமத்தில் உள்ள நன்செய் நிலங்களின் உரிமையாளர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதியானவர்கள். இப்பட்டியலை கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் பொதுப்பணித்துறையினர் தயாரிக்கின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 124 நீர்நிலை அமைப்புகள் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்சனிக்கிழமை நடைபெற்றது, முடிவுகளும் சில மணி நேரங்களிலேயே வெளியிடப்பட்டது.

அப்போது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக சோமங்கலம் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீபெரும்புதூரில் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினரைக் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

காஞ்சி மாவட்டத்தில் உள்ள 124 ஏரி நீர்ப்பாசன சங்கங்களுக்கு தேர்தலில் 112 சங்கங்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கீழ்பெரணமல்லூர், மேல்பெரணமல்லூர் உள்ளிட்ட 6 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 6 இடங்களுக்கு மனுக்களே வரவில்லை.

இதில், சோமங்கலம் ஏரிப்பாசன சங்கத்தில் போட்டியின்றி தலைவர் தேர்வாகும் நிலை இருந்தது. ஆனால், கிராமத்தில் உள்ள ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் அக்கிராமத்துக்கு மட்டும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x