Published : 07 Feb 2018 09:22 AM
Last Updated : 07 Feb 2018 09:22 AM

புதுவை ஆளுநர் கிரண்பேடியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார். சமூக ஊடகங்கள் மூலம் தனது சுற்றுபயண விவரங்கள், அரசு நிகழ்ச்சிகள், அறிக்கைகள், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தான் ஆற்றும் உரைகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார்.

அரசியல் ரீதியான கருத்துக்களையும், விமர்சனங்களையும் ட்விட்டர், வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்துவதும் இவரது வழக்கம். இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடியின் ட்விட்டர் பக்கம் நேற்று மாலை திடீரென முடக்கப்பட்டு விட்டது. இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடியே, தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘2010-ல் ட்விட்டர் கணக்கு தொடங்கி, தொடர்ந்து அதில் பதிவிட்டு வருகிறேன். நேற்று மாலை திடீரென ட்விட்டர் பக்கத்தை திறந்தபோது அது முடக்கப்பட்டு விட்டதாக தகவல் இருந்தது. இதுகுறித்து ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன்’’ என்றார்.

கிரண்பேடியின் ட்விட்டர் பக்கத்தை 25,200 பேர் தொடர்கின்றனர். 4,551 பதிவுகளை இதுவரை அவர் பதிவு செய்துள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் அவருடன் ட்விட்டர் தொடர்பில் உள்ளனர்.

கிரண் பேடி தவிர, நடிகர் அனுபம் கெர், பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், மாநிலங்களவை எம்.பி. ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளன. துருக்கியில் இருந்து செயல்படும் ‘அய்யில்டிஸ் டிம்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு சைபர் குழு இந்தக் கணக்குகளை முடக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x