Published : 23 Feb 2018 10:49 AM
Last Updated : 23 Feb 2018 10:49 AM

டிடிவி தினகரனுக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆதரவு: அதிமுகவில் இருந்துகொண்டு மக்கள் சேவை செய்யமுடியவில்லை என குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ., பிரபு இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென சந்தித்தார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் சந்தித்த அவர் பூங்கொத்து கொடுத்து தினகரனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்யமுடியவில்லை. தனது தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதற்கு கட்சி நிர்வாகிகள் தடுப்பதால் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகக் கூறினார்.

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரபு, "அதிமுகவில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்யமுடியவில்லை. எனது சொந்த தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்குக்கூட கட்சி நிர்வாகிகளே முட்டுக்கட்டை போடுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நிலவும் பிரச்சினை என்னவென்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனியாக மாவட்டம் உருவாக்கித்தர வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனக்கும், விழுப்புரம் தொகுதி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

மக்கள் சேவையைத் தொடர தமிழகத்தை வழிநடத்தும் தகுதியுள்ள டிடிவி தினகரன் வழியில் செல்ல விரும்புவதால் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். மக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்குதான் உள்ளது. டிடிவி தினகரனுக்கு உள்ள மக்கள் ஆதரவு என்னவென்பதை ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றியே உணர்த்திவிட்டது. மீதமுள்ள ஆட்சி காலத்தில் சின்னம்மா தலைமையிலும் டிடிவி தினகரன் தலைமையிலும் இயங்கினால்தான் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் தமிழகத்தில் ஆட்சி செலுத்த முடியும். எனவே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர் முதல்வராவதற்கு வாய்ப்பு இருக்கிறது" எனப் பேசினார்.

அதிமுகவில் அண்மைக்காலமாக ஓய்ந்திருந்த சலசலப்பு தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை ஓபிஎஸ் மறுத்தார். இந்நிலையில், தற்போது அதிமுக எம்.எல்.ஏ., பிரபு டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

முழு விவரம் தெரிந்தவுடன் பேசுகிறேன்..

இதற்கிiடையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "முழு விவரமும் தெரிந்தவுடன் பேசுகிறேன்" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x