Published : 01 Feb 2024 06:11 AM
Last Updated : 01 Feb 2024 06:11 AM

ஆலங்குடி முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் காலமானார்

எஸ்.ராஜசேகரன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் நேற்று காலமானார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.ராஜசேகரன்(81). இவர், ஆலங்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (2006-2011) போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், அந்தக்கட்சியில் இருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2013-ல்இணைந்தார். அக்கட்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் இரு தினங்களுக்கு முன்புபுதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜசேகரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு குளமங்கலத்தில் இன்று (பிப்.1) நடைபெற உள்ளது.

பாலகிருஷ்ணன் இரங்கல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்.ராஜசேகரன் மறைவுக்கு, கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது.

2013-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், மாவட்ட செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகாலம் பணியாற்றி, கட்சியின் வளர்ச்சிக்கும், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நலன்களுக்காகவும் அரும்பாடுபட்டவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைப்பாளி வர்க்கத்துக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்தஇரங்கலும், ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x