Last Updated : 31 Jan, 2024 08:37 PM

6  

Published : 31 Jan 2024 08:37 PM
Last Updated : 31 Jan 2024 08:37 PM

“பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா?” - அண்ணாமலை சவால்

திருப்பத்தூர்: “பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. பிரதமர் மோடி தலைமையில் 75 அமைச்சர்கள் உள்ளனர். இதில், ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா?” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று மேற்கொண்டார். திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலை அருகே வந்த அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பிறகு, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவுக்கு அவர் நடைபயணம் செய்தார். இதையடுத்து, திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே அவர் பொதுக்கூட்டத்தில் பேசியது: “தமிழகத்தில் குடும்ப அரசியல் நடக்கிறது. குடும்ப அரசியலை நாங்கள் அடியோடு வெறுக்கிறோம். குடும்பம், சாதி, ஊழல் மற்றும் அடாவடி அரசியலை அடியோடு அகற்ற வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பின்னால் நாம் அணிவகுத்து நிற்க வேண்டும்.

பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு வந்துள்ளது. 2028-ம் ஆண்டில் 3-வது இடத்துக்கு முன்னேறும். 2047-ம் ஆண்டில் உலகில் முதல் இடத்துக்கு இந்தியா வர பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அது சரித்திர தேர்தல். காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் ஊழல் பெருகியது. தனிப் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகள் பெரிய ஊழலில் ஈடுபட்டனர். பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. பிரதமர் மோடி தலைமையில் 75 அமைச்சர்கள் உள்ளனர். இதில், ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா?

அதுவே, தமிழகத்தில் 35 அமைச்சர்களில் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 8 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராகவே தொடர்கிறார். அடுத்து பொன்முடி. இவர்கள் 2 பேரை தவிர மேலும் 10 பேர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கான தீர்ப்பு விரைவில் வரும். அதன் பிறகு, இலாக்கா உள்ள அமைச்சர்களை காட்டிலும் இலாக்கா இல்லாத அமைச்சர்கள் தான் தமிழகத்தில் அதிகம் இருப்பார்கள்.

கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 33 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டது. குஜராத் மாநிலத்தில் 26 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டது. தமிழகத்தில் வெறும் 6.60 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. குஜராத், உ.பி போன்ற மாநிலங்களில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தர வேண்டியதில்லை. ஆனால், தமிழகத்தில் முதலவர் குடும்பத்தாரையும், திமுக ஆடிட்டரை சந்திக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் போதுமான வளர்ச்சிபெறவில்லை. எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்க மோடியால் மட்டுமே முடியும். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏகலைவா பள்ளி ஒன்று மட்டுமே உள்ளது. நவோதயா பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வர பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கு மக்கள் பாஜகாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில் பாஜக மாநிலச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x