Published : 31 Jan 2024 05:53 AM
Last Updated : 31 Jan 2024 05:53 AM

ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்

அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யும் வகையில்உற்பத்தியாளர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: :

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்தவதற்குரிய அனைத்துவசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்தளபேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனை தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் ரூ.135.48 கோடி மதிப்பீட்டில்தயாரித்து வழங்க உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 26 பேருந்துகளும், சேலம் அரசுபோக்குவரத்துக் கழகத்துக்கு 16 பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 20 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு38 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 33 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 17 பேருந்துகள் என பகிர்ந்து வழங்கப்படவுள்ளன.

இவ்வாறு 150 புதிய தாழ்தள நகர பேருந்துகள் பொதுமக்களின் போக்குவரத்து சேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இந்த முயற்சிகளின் வாயிலாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் போக்குவரத்து சேவைகள் தமிழகத்தை முதன்மையான நிலைக்கு உயர்த்திடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x