Published : 30 Jan 2024 05:00 PM
Last Updated : 30 Jan 2024 05:00 PM

‘230 நாட்களாக சிறையில் இருந்தபடியே அமைச்சராக செந்தில் பாலாஜி...’ - ஐகோர்ட் கேள்வியும் அரசு தரப்பு பதிலும்

செந்தில்பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா? என்பதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாக கருதுவதாக மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "வழக்கின் புலன் விசாரணை முடிந்துவிட்டது. ஆவணங்கள் அமலாக்கத் துறை வசம் உள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் எனக்கூறி ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது" என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் 230 நாட்களுக்கு மேல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு, அவர் அமைச்சராக நீடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது கண்டன தீர்மானம் வந்தபோது, அப்போதைய தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் அவர் முன் ஆஜராகலாம் என தலைமை நீதிபதி கூறினார். தொடர்ந்து நீதிபதியாகவும் நீடித்தார். மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது" என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x