Published : 30 Jan 2024 06:30 PM
Last Updated : 30 Jan 2024 06:30 PM

அரசு பேருந்துகளில் காட்சி பொருளான முதலுதவி சிகிச்சை பெட்டி

அரசு பேருந்தில் காட்சி பொருளாக உள்ள முதலுதவி சிகிச்சை பெட்டி. படம்:இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முதலுதவி சிகிச்சை பெட்டி என்பது காட்சி பொருளாக உள்ளது. தமிழகத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 இடங்களை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன. இதில், தினசரி 5 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போக்கு வரத்து விதியில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக, ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் “முதலுதவி பெட்டி” இடம் பெற்றிருக்க வேண்டும். அப்பெட்டியில் சுமார் ரூ.200 மதிப்பிலான டிஞ்சர், பிளாஸ்டர், பொட்டாசியம் பெர்மாங்கனேட், பஞ்சு உள்ளிட்ட முதலுதவி பொருட்கள் இருக்க வேண்டும்.

பயணிகளுக்கு காயம் ஏற்பட்டால், இப்பொருட்களை பயன்படுத்தி முதலுதவி அளிக்கலாம். பேருந்தில் பயணிக்கும்போது அசம்பாவித நிகழ்வு ஏற்பட்டால், பேருந்தில் இருந்து உடனடியாக வெளியேற அவசர வழி கதவு இருக்க வேண்டும்.

மேலும், ஓட்டுநரின் இருக்கை அருகே அவசர வழி கண்ணாடியை உடைக்க சுத்தி இருக்க வேண்டும். இதில், மிக முக்கியமாக தீ தடுப்பான் கருவி இருப்பது அவசியமாகும்.

ஆனால், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முதலுதவி பெட்டி என்பது காட்சி பொருளாக உள்ளன. இப்பெட்டி, மருந்துகள் இல்லாமல் காலியாக கிடக்கிறது. ஒரு சில பேருந்து களில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் துணிகளை வைக்க பயன்படுத்தப்படுகிறது. தீ தடுப்பான் கருவி இல்லை.

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை பாதுகாப்பதில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலட்சியம் தொடர்கிறது. பழைய பேருந்துகளின் நிலை படுமோசமாக உள்ளது. தகரங்கள் பெயர்ந்து பயணிகளை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. பயணிகள் வேறு வழியின்றி பயணிக்கின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறும்போது, “தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முதலுதவி பெட்டி, தீ தடுப்பான் கருவி போன்றவை கிடையாது. இவைகள் அனைத்தும் இருக்க வேண்டும். இதனை, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளும் கண்டு கொள்வது கிடையாது.

பயணத்தில் ஏதாவது அசம்பாவித நேரிட்டால், முதலுதவி அளிக்க முடியவில்லை. ரத்தம் சொட்ட, சொட்ட பயணம் செய்ய வேண்டும். பயணிகள் நலனில் அக்கறை கொண்டு, அரசு பேருந்துகளில் முதலுதவி பெட்டியில் மருந்துகளை தயார் நிலையில் வைத்திக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் முன் வர வேண்டும். இதே நிலைதான் தனியார் பேருந்துகளிலும் உள்ளன. இதனையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றனர்.

தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முதலுதவி பெட்டி என்பது காட்சி பொருளாக உள்ளன. இப்பெட்டி, மருந்துகள் இல்லாமல் காலியாக கிடக்கிறது. ஒரு சில பேருந்துகளில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் துணிகளை வைக்க பயன்படுத்தப்படுகிறது. தீ தடுப்பான் கருவி இல்லை. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை பாதுகாப்பதில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலட்சியம் தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x