Published : 30 Jan 2024 05:49 AM
Last Updated : 30 Jan 2024 05:49 AM

தமிழக அரசு இந்துக்களின் விரோதி போன்ற மாயத்தோற்றத்தை சித்தரிக்க முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி சார்பில் பதில் மனு

புதுடெல்லி: ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான நேரலையை ஒளிபரப்பக் கூடாது என வாய்மொழியாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் மூலமாக தமிழக அரசு இந்துக்களின் விரோதி என்பது போன்ற மாயத்தோற்றத்தை சித்தரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் கடந்த ஜன. 22-ம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் பிரதிஷ்டை தொடர்பான நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்ய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு வாய்மொழியாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த வினோஜ் பன்னீர்செல்வம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 22-ம் தேதிநீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் தாமா சேஷாத்ரி நாயுடு, பி.வள்ளியப்பன் மற்றும் வழக்கறிஞர் ஜி.பாலாஜி ஆகியோர், நாட்டின் முக்கிய நிகழ்வான ராமர் கோயில் பிரதிஷ்டை விழா தொடர்பான நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக முதல்வர் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, அதுபோல எந்தவொரு வாய்மொழி உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை என தெரிவித்திருந்தார். அதையடுத்து நீதிபதிகள், ராமர் கோயில் விழா தொடர்பான நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யவோ, அதுதொடர்பாக பூஜைகள், பஜனைகள் மேற்கொள்ளவோ தமிழகத்தில் யாரும்முறைப்படி அனுமதி கோரினால்அதிகாரிகள் அதை சட்டத்துக்குட்பட்டும், முன்மாதிரி தீர்ப்புகளை மனதில் கொண்டும் பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும் எனஉத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சார்பில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: அயோத்தி கோயில் விழா நேரடி ஒளிபரப்புக்கு வாய்மொழியாக தடை விதித்து இருப்பதாக கூறிதொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் மூலமாக, தமிழக அரசு இந்துக்களின் விரோதி என்பது போன்ற மாயத்தோற்றத்தை சித்தரிக்க மனுதாரர் முயற்சி செய்துள்ளார். வாய்மொழி உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. அடிப்படை ஆதாரமற்றது.

மனுதாரர் கற்பனையாக இப்படியொரு குற்றச்சாட்டை சுமத்தி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. ராமர் கோயில் விழா தொடர்பான நேரலை, பஜனைகள், பூஜைகள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்கள், மண்டபங்கள் என மொத்தம் 252 இடங்களில் எந்த தடையோ, போலீஸாரின் குறுக்கீடோ இல்லாமல் அமைதியாக நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக 288 விண்ணப்பங்கள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் மனுவில் தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x