Published : 30 Jan 2024 05:08 AM
Last Updated : 30 Jan 2024 05:08 AM

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை: காவல் 17-வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னைபுழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிஆனந்த் வெங்கடேஷ் முன்பு அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததால், காவல் நீட்டிப்புக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.17-வது முறையாக அவரது நீதிமன்ற காவலை 31-ம் தேதி (நாளை) வரைநீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அமலாக்கத் துறை பதில் மனு: இதற்கிடையே, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி குற்றச்சாட்டு பதிவுக்காக தேதி குறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இதுதொடர்பாக ஏற்கெனவே பதிவு செய்த 3 பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தரப்பு வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத் துறை பதில் அளிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு அரசுவழக்கறிஞர் என்.ரமேஷ் நேற்று ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். ‘வழக்கு விசாரணையை முடக்கும் வகையிலும்,குற்றச்சாட்டு பதிவு மற்றும் சாட்சிகள் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படை காரணமும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அதில் கோரப்பட்டுள்ளது.

இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி அல்லி, வழக்கு விசாரணையை ஜனவரி 31-ம்தேதிக்கு (நாளை) தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x