புதுச்சேரி | இலவச லேப்டாப் கோரி பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வித் துறை அலுவலகம் முற்றுகை

புதுச்சேரியில் பள்ளி முன்னாள் மாணவர்கள் இன்று நடத்திய போராட்டம்.
புதுச்சேரியில் பள்ளி முன்னாள் மாணவர்கள் இன்று நடத்திய போராட்டம்.
Updated on
1 min read

புதுச்சேரி: இலவச லேப்டாப் வழங்கக் கோரி பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வித்துறையை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இதற்காக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 24-ம் தேதி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 12-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இலவச லேப்டாப் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, ஒவ்வொரு அரசு பள்ளியிலும் படிக்கும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2023-24ம் கல்வி ஆண்டு 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இலவச லேப்டாப் வழங்கப்படும். கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாது என்ற தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை இன்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, முதல்வர் ரங்கசாமி அறிவித்தபடி தங்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லா சத்திய நாராயணா தலைமையிலான போலீஸார் அங்கு வந்து மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் தங்களுடைய கோரிக்கையை மனுவாக அளித்தால், துறை அமைச்சரிடம் பேசி லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனையேற்ற முன்னாள் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in