Published : 18 Feb 2018 11:34 AM
Last Updated : 18 Feb 2018 11:34 AM

சிறார்களிடையே ஜாதி மோதலை தடுக்க நடவடிக்கை: நெல்லை எஸ்.பி. அருண் சக்திகுமார் தகவல்

சிறார்களிடையே ஜாதி மோதல் ஏற்படாமல் தடுக்க பிற துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்தார்.

சமூக பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஆகியவை சார்பில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தைகள் நல காவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. அனைத்து காவல் நிலையங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல காவலர்கள் கலந்துகொண்டனர்.

இளைஞர் நீதிச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இவை தொடர்பான விழிப்புணர்வு கையேடு காவல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

பயிற்சியைத் தொடங்கிவைத்து காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் பேசியதாவது:

போலீஸாருக்கு வகுப்பு

குற்ற உணர்வு எது?, குற்றம் அல்லாத உணர்வு எது? என்பது குறித்து துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மூலம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர சிறார் குற்றம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி, கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

சிறார்களிடையே ஜாதி பிரச்சினைகள் வராமல் இருக்க பிற துறை அலுவலர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் ஒரு திருக்குறள், ஒரு சட்டம் குறித்து போலீஸாருக்கு வகுப்பு நடத்தப்படுகிறது. இதனை போலீஸார் எந்த அளவுக்கு புரிந்துள்ளனர் என்பதையும் பரிசோதனை செய்து வருகிறோம்.

அனுமதிக்க கூடாது

மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பவர்கள் குறித்த பட்டியல் தயார் செய்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது தவறானது. அதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றால், அதனை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தேவ் ஆனந்த் பேசும்போது, ‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் 85 குழந்தைகள் காப்பகங்களில் 3,778 குழந்தைகள் உள்ளனர். அனுமதியின்றி செயல்பட்டதால் கடந்த சில மாதங்களில் 9 குழந்தைகள் காப்பகங்கள் சீல் வைக்கப்பட்டன.

பின்னர், அவர்கள் முறையான அனுமதி பெற்று காப்பகத்தை நடத்தி வருகின்றனர். காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் நிலை குறித்து பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், 3 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்படுகிறது” என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) கார்த்திக், காவல் துணை கண்காணிப்பாளர் ராஜகுமார், வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், மதுரை அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் சிவகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு அலுவலர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x