Published : 15 Feb 2018 11:29 AM
Last Updated : 15 Feb 2018 11:29 AM
முதல்வர் பதவியை இழந்து ஓராண்டு ஆனது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தத்துவார்த்த ரீதியாக பதிலளித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அவசர அவசரமாக இரவோடு இரவாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். பின்னர், கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்புகளால் அவரது பதவி பறிபோனது. அதன்பின் ஜெ. சமாதியில் தியானம் செய்த அவர் தர்மயுத்தத்தை தொடங்கி பல்வேறு திருப்பங்களுக்குப் பின் மீண்டும் ஈபிஎஸ் அணியில் இணைந்தார். தற்போது துணை முதல்வராக இருக்கிறார்.
இந்நிலையில், "நீங்கள் முதல்வர் பதவியை இழந்து ஓராண்டு ஆகிறது. அது குறித்து வருத்தம் இருக்கிறதா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "இது ஒரு நல்ல கேள்வி, எதைக் கொண்டுவந்தோம் அதை நாம் இழப்பதற்கு?" என தத்துவார்த்த ரீதியாக பதிலளித்தார்.
"எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு..
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்..." என்பது கீத உபதேசம். அந்தத் தொணியில் ஓபிஎஸ்.ஸும் பதிலளித்திருக்கிறார்.
மேலும், அம்மா உணவகங்கள் நஷ்டத்தில் இயங்குவது தொடர்பான கேள்விக்கு, "அம்மா உணவகங்கள் லாப நோக்கத்துக்காக தொடங்கப்படவில்லை. அது ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT