Published : 19 Jan 2024 10:23 PM
Last Updated : 19 Jan 2024 10:23 PM

“தமிழகம் சாம்பியன்களை உருவாக்கிய பூமி” - சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

சென்னையில் நடந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கிவைத்து உரையாற்றும் பிரதமர் மோடி

சென்னை: இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம். டென்னிஸ் சாம்பியன் அமிர்தராஜ் சகோதரர்கள், ஒலிம்பிக்கில் இந்தியாவை தங்கப் பதக்கம் வெல்ல வழிநடத்திய இந்தியாவின் ஹாக்கி கேப்டன் பாஸ்கரன், சதுரங்க வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மற்றும் பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் உள்ளிட்ட பலரும் இங்கிருந்து வந்தவர்கள் என்று கேலோ இந்தியா போட்டிகளை தொடக்கி வைத்த பிரதமர் மோடி கூறினார்.

சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.19) கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 250 கோடி மதிப்பிலான தகவல் ஒலிபரப்புத் துறை தொடர்பான திட்டங்களையும் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அவர், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவைக் குறிக்கும் வகையில் விளையாட்டு வீரர்கள் வழங்கிய விளையாட்டு ஜோதியை அவர் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கு அனைவரையும் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கூடியிருப்பவர்கள் இளைய இந்தியா மற்றும் புதிய இந்தியாவின் பிரதிநிதிகள். இவர்கள்தான் விளையாட்டு உலகில் நாட்டை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவர்கள்.

நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ”ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற உண்மையான உணர்வை நீங்கள் ஒன்றாக வெளிப்படுத்துகிறீர்கள். தமிழ்நாட்டின் அன்பான மக்கள், அழகான தமிழ் மொழி, அதன் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள் விளையாட்டு வீரர்களான நீங்கள் உங்களது இல்லத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். தமிழ்நாட்டின் விருந்தோம்பல் அனைத்து இதயங்களையும் வெல்லும். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் வீரர்களின் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும். இங்கு கிடைக்கும் புதிய நட்புகளும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

1975-ம் ஆண்டு ஒளிபரப்பைத் தொடங்கிய சென்னை தூர்தர்ஷன் நிலையம் இன்று புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. 8 மாநிலங்களில் 12 ஆகாஷ்வாணி பண்பலைத் திட்டங்கள் 1.5 கோடி மக்களைச் சென்றடையும். இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம். டென்னிஸ் சாம்பியன் அமிர்தராஜ் சகோதரர்கள், ஒலிம்பிக்கில் இந்தியாவை தங்கப் பதக்கம் வெல்ல வழிநடத்திய இந்தியாவின் ஹாக்கி கேப்டன் பாஸ்கரன், சதுரங்க வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மற்றும் பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் உள்ளிட்ட பலரும் இங்கிருந்து வந்தவர்கள்.

கேலோ இந்தியா இயக்கம், போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் திறமைகளை கண்டறியும்.12 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் மற்றும் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை விளையாடுவதற்கும் திறமைகளைக் கண்டறிவதற்கும் சிறந்த வாய்ப்புகள்.

தற்போது, தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு பெரிய நகரங்கள் விளையாட்டு வீரர்களை வரவேற்க தயாராக உள்ளன. பங்கேற்பாளராக இருந்தாலும் சரி, பார்வையாளராக இருந்தாலும் சரி, சென்னையின் கண்கவர் கடற்கரைகள் அனைவரையும் ஈர்க்கும். மதுரையின் பிரமாண்டமான கோயில்கள், திருச்சியின் கோயில்கள் மற்றும் அதன் கலை மற்றும் கைவினைப் பொருட்கள், உழைப்பு நிறைந்த கோயம்புத்தூர் நகரம் ஆகியவற்றின் சிறப்புகளும், தமிழ்நாட்டின் நகரங்களில் கிடைக்கும் அனுபவங்களும் மறக்க முடியாதவை.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 5,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன் மற்றும் ஸ்குவாஷ் ஆகியவை முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தோன்றிய தற்காப்புக் கலையான சிலம்பம் போன்ற பிற விளையாட்டுக்களை காண ஆவலாக இருக்கிறேன். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து விளையாட்டு வீரர்களின் உறுதிப்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை ஒன்றிணைக்கும். இந்த தேசம் அவர்களின் அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை, ஒருபோதும் தளராத உணர்வு மற்றும் அசாதாரண செயல்திறனை ஊக்குவிக்கும்.

தனது எழுத்துக்கள் மூலம் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து அவர்களுக்கு வழிகாட்டினார். துன்பங்களின் போது துவண்டு விடாமல் வலுவாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். வீரமங்கை வேலு நாச்சியார் இந்த விளையாட்டுப் போட்டியின் சின்னமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிஜ ஆளுமையைச் சின்னமாகத் தேர்வு செய்வது சிறந்த விஷயம். வீர மங்கை வேலு நாச்சியார் பெண் சக்தியின் அடையாளம். இன்று அவரது ஆளுமை அரசின் பல முடிவுகளில் பிரதிபலிக்கிறது. அவரது உத்வேகத்துடன், விளையாட்டு வீராங்கனைகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பெண் விளையாட்டு வீரர்களின் விளையாட்டு வலிமையை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கடந்த காலங்களில் கூட விளையாட்டு வீரர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் ஊக்கம் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அரசிடமிருந்து உற்சாகமும் ஆதரவும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் அரசு பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். விளையாட்டு தொடர்பான அணுகுமுறைகள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 50,000 உதவி வழங்கும் கேலோ இந்தியா இயக்கம் மற்றும் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் (டாப்ஸ்) ஆகியவை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி, சர்வதேச வாய்ப்புகள் மற்றும் பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மீது இந்தியாவின் கவனம் இருப்பதால், டாப்ஸ் திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன.

"இன்று, இளைஞர்கள் விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுப்பதற்காக நாம் காத்திருப்பதில்லை. இளைஞர்களிடம் விளையாட்டை எடுத்துச் செல்கிறோம். கேலோ இந்தியா போன்ற இயக்கங்கள் கிராமப்புற, ஏழை, பழங்குடி மற்றும் கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்குகின்றன. உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் திறமைகளை வெளிப்படுத்துவது உட்பட, உள்ளூர் திறமைகளை சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பல சர்வதேச போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டையூவில் சமீபத்தில் நடைபெற்ற கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் 8 பாரம்பரிய இந்திய விளையாட்டுகள் இடம்பெற்றன இதில் 1600 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுகள் கடற்கரை விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு சுற்றுலாவில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளதால், கடலோர நகரங்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் அனுபவம் அளிக்க வேண்டும். உலக விளையாட்டுச் சூழலின் முக்கிய மையமாக நாடு திகழ வேண்டும். எனவே, 2029-ல் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளையும், 2036-ல் ஒலிம்பிக் போட்டிகளையும் இந்தியாவில் நடத்த தீவிரமாக பணியாற்றி வருகிறோம். விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்காக நின்றுவிடாமல், மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் தளம் ஆகும். இது இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும். கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு தொடர்பான பொருளாதாரத்தின் பங்கை அதிகரிக்கவும், விளையாட்டு தொடர்பான துறைகளை மேம்படுத்தவும் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

விளையாட்டு நிபுணர்களை வளர்ப்பதற்காக திறன் மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சேவைகள் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். நாட்டில் விளையாட்டு அறிவியல், கண்டுபிடிப்புகள், உற்பத்தி, விளையாட்டு பயிற்சி, விளையாட்டு உளவியல் மற்றும் விளையாட்டு ஊட்டச்சத்து தொடர்பான தொழில் வல்லுநர்களுக்கு ஒரு தளத்தை அரசு வழங்கி வருகிறது.கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் முதலாவது தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. கேலோ இந்தியா பிரச்சாரத்தின் கீழ் நாட்டில் 300-க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க அகாடமிகள், 1,000 கேலோ இந்தியா மையங்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் புதிய தேசிய கல்விக் கொள்கையில், குழந்தைப் பருவத்திலேயே விளையாட்டை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இது உதவும். விளையாட்டு முக்கிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் விளையாட்டுத் துறை வளர்ச்சி ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டு குறித்த புதிய விழிப்புணர்வு மற்றும் அதன் விளைவாக ஒளிபரப்பு, விளையாட்டு பொருட்கள், விளையாட்டு சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆடை வர்த்தகம் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டு உபகரணங்களுக்கான உற்பத்தி தொகுப்புகளை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு உள்கட்டமைப்பு வேலைவாய்ப்புக்கான மிகப்பெரிய ஆதாரமாக மாறி வருகிறது. பல்வேறு விளையாட்டு லீக்குகளும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இன்று, விளையாட்டு தொடர்பான துறைகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் நமது இளைஞர்களுக்கு, சிறந்த எதிர்காலம் அமைவது நிச்சயம்.

விளையாட்டில் மட்டுமின்றி, ஒவ்வொரு துறையிலும் இந்தியா புதிய அலைகளை உருவாக்கி வருகிறது. புதிய இந்தியா பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்திய இளைஞர்களின் ஆற்றல், அவர்களின் நம்பிக்கை, உறுதிப்பாடு, மன வலிமை மற்றும் வெற்றி பெறுவதற்கான விருப்பம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இன்றைய இந்தியாவால் மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முடியும். இந்த ஆண்டு புதிய சாதனைகளை இந்தியா படைக்கும். நாட்டுக்கும் உலகுக்கும் புதிய சாதனைகளை அர்ப்பணிக்கும். நீங்கள் முன்னேற வேண்டும், ஏனென்றால் இந்தியா உங்களுடன் முன்னோக்கி நகரும். ஒன்றிணையுங்கள், வெற்றி பெறுங்கள், நாட்டுக்கு வெற்றியை சமர்ப்பணம் செய்யுங்கள். விளையாடு இந்தியா, இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடங்கப்பட்டதாக நான் பிரகடனம் செய்கிறேன்" என்று பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x