Published : 18 Jan 2024 05:31 AM
Last Updated : 18 Jan 2024 05:31 AM

அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பு நிலம் வழங்கிய பூரணம் அம்மாளுக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு

அரசுப் பள்ளிக்கு நிலம் வழங்கிய பூரணம் அம்மாளின் வீட்டுக்குச் சென்று பாராட்டி, அவருக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கிய அமைச்சர் உதயநிதி. உடன், அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்டோர்.

மதுரை: மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலம் வழங்கிய வங்கி பெண் ஊழியர் பூரணம் அம்மாளின் வீட்டுக்கே சென்று, அமைச்சர் உதயநிதி அவரைப் பாராட்டினார்.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூரணம் அம்மாள். இவரது கணவர் உக்கிரபாண்டியன் இறந்ததால் வாரிசு அடிப்படையில் மதுரை தல்லாகுளம் கனரா வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஜனனி(30) இரண்டு ஆண்டுக்கு முன்பு காலமானார்.

மகள் நினைவாக... இந்நிலையில், மகள் ஜனனி நினைவாக, பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள ரூ.1.52 ஏக்கர் நிலத்தை ஜன.5-ம் தேதி பள்ளியின் பெயரில் பத்திரப் பதிவு செய்து அரசுக்குத் தானமாக வழங்கினார்.

இவரது இச்செயலை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரை கவுரவிக்கும் வகையில் குடியரசு தின விருதும் அறிவித்துள்ளார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வங்கிக்கு சென்று பாராட்டினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கிவைக்க வந்திருந்த அமைச்சர் உதயநிதி, பூரணம் அம்மாளின் வீட்டுக்கு நேற்று சென்றுஅவரைப் பாராட்டியதோடு திருவள்ளுவர் சிலையைப் பரிசாக வழங்கினார். முன்னதாக பூரணம் அம்மாளின் மகள் ஜனனியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x