Published : 14 Jan 2024 11:23 AM
Last Updated : 14 Jan 2024 11:23 AM

ஜன.15, 16, 17-ம் தேதிகளில் ஞாயிறு அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக, ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களும் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் அதிகாலை 5 மணி முதல் இரவு 11மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப் படுகின்றன. வார நாட்களில் ( திங்கள் முதல் சனிக்கிழமை வரை ) விமான நிலையத்தில் இருந்து முதல் சேவை அதிகாலை 4.51 மணிக்கும், கடைசி சேவை இரவு 11 மணிக்கும் புறப்படும். நெரிசல் மிகுந்த அலுவலக நேரங்களில் 6 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.

சென்ட்ரல் - பரங்கிமலை வழித் தடத்தில் நெரிசல் மிகுந்த நேரத்தில் 12 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 14 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்பட்டாலும், சேவைகள் எண்ணிக்கை மாறுபடும். அதாவது, விமான நிலையம் - விம்கோ நகர் வழித் தடத்தில் அலுவலக நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும். சென்ட்ரல் - பரங்கிமலை வழித் தடத்தில் 14 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, ஜனவரி 15, 16, 17-ம் தேதிகளில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த 3 நாட்களும் வழக்கம் போல, அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x