Published : 12 Jan 2024 03:41 PM
Last Updated : 12 Jan 2024 03:41 PM

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு தாக்கல் @ சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையர் தாக்கல் செய்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எட்பபாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன் ஆஜராகி, எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியப் பதிவு நடைமுறை முடிந்து விட்டதாகவும், 6 ஆவணங்கள் குறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சாட்சியப் பதிவை தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x